திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.111 திருவாய்மூர்
பண் - நட்டராகம்
தளிரிள வளரென உமைபாடத்
    தாள மிடவோர் கழல்வீசிக்
கிளரிள மணியர வரையார்த்
    தாடும் வேடக் கிறிமையார்
விளரிள முலையவர்க் கருள்நல்கி
    வெண்ணீ றணிந்தோர் சென்னியின்மேல்
வளரிள மதியமொ டிவராணீர்
    வாய்மூ ரடிகள் வருவாரே.
1
வெந்தழல் வடிவினர் பொடிப்பூசி
    விரிதரு கோவண வுடைமேலோர்
பந்தஞ்செய் தரவசைத் தொலிபாடிப்
    பலபல கடைதொறும் பலிதேர்வார்
சிந்தனை புகுந்தெனக் கருள்நல்கிச்
    செஞ்சுடர் வண்ணர்தம் மடிபரவ
வந்தனை பலசெய இவராணீர்
    வாய்மூ ரடிகள் வருவாரே.
2
பண்ணிற் பொலிந்த வீணையர்
    பதினெண் கணமு முனராநஞ்
சுண்ணப் பொலிந்த மிடற்றினார்
    உள்ள முரகி லுடனாவார்
சுண்ணப் பொடிநீ றணிமார்பர்
    சுடர்பொற் சடைமேல் திகழ்கின்ற
வண்ணப் பிறையோ டிவராணீர்
    வாய்மூ ரடிகள் வருவாரே.
3
எரிகிளர் மதியமொ டெழில்நுதன்மேல்
    எறிபொறி யரவினொ டாறுமூழ்க
விரிகிளர் சடையினர் விடையேறி
    வெருவவந் திடர்செய்த விகிர்தனார்
புரிகிளர் பொடியணி திருவகலம்
    பொன்செய்த வாய்மையர் பொன்மிளிரும்
வரியர வரைக்கசைத் திவராணீர்
    வாய்மூ ரடிகள் வருவாரே.
4
அஞ்சன மணிவணம் எழில்நிறமா
    வகமிட றணிகொள வுடல்திமில்
நஞ்சினை யமரர்கள் அமுதமென
    நண்ணிய நறுநுதல் உமைநடுங்க
வெஞ்சின மால்களி யானையின்தோல்
    வெருவுறப் போர்த்ததன் நிறமுமஃதே
வஞ்சனை வடிவினோ டிவராணீர்
    வாய்மூ ரடிகள் வருவாரே.
5
அல்லிய மலர்புல்கு விரிகுழலார்
    கழலிணை யடிநிழ லவைபரவ
எல்லியம் போதுகொண் டெரியேந்தி
    யெழிலொடு தொழிலவை யிசையவல்லார்
சொல்லிய அருமறை யிசைபாடிச்
    சூடிய மதியினர் தோடுபெய்து
வல்லியந் தோலுடுத் திவராணீர்
    வாய்மூ ரடிகள் வருவாரே.
6
கடிபடு கொன்றைநன் மலர்திகழுங்
    கண்ணியர் விண்ணவர் கனமணிசேர்
முடிபில்கும் இறையவர் மறுகின்நல்லார்
    முறைமுறை பலிபெய முறவல்செய்வார்
பொடியணி வடிவொடு திருவகலம்
    பொன்னென மிளிர்வதோர் அரவினொடும்
வடிநுனை மழுவினொ டிவராணீர்
    வாய்மூ ரடிகள் வருவாரே.
7
கட்டிணை புதுமலர் கமழ்கொன்றைக்
    கண்ணியர் வீணையர் தாமுமஃதே
எட்டுணை சாந்தமொ டுமைதுணையா
    இறைவனா ருறைவதோ ரிடம்வினவில்
பட்டிணை யகலல்குல் விரிகுழலார்
    பாவையர் பலியெதிர் கொணர்ந்துபெய்ய
வட்டணை யாடலொ டிவராணீர்
    வாய்மூ ரடிகள் வருவாரே.
8
ஏனம ருப்பினொ டெழிலாமை
    யிசையப் பூண்டோ ரேறேறிக்
கானம திடமா வுறைகின்ற
    கள்வர் கனவில் துயர்செய்து
தேனுண மலர்கள் உந்திவிம்மித்
    திகழ்பொற் சடைமேல் திகழ்கின்ற
வானநன் மதியினொ டிவராணீர்
    வாய்மூ ரடிகள் வருவாரே.
9
சூடல்வெண் பிறையினர் சுடர்முடியர்
    சுண்ணவெண் ணீற்றினர் சுடர்மழுவர்
பாடல்வண் டிசைமுரல் கொன்றையந்தார்
    பாம்பொடு நூலவை பசைந்திலங்கக்
கோடனன் முகிழ்விரல் கூப்பிநல்லார்
    குறையுறு பலியெதிர் கொணர்ந்துபெய்ய
வாடல்வெண் டலைபிடித் திவராணீர்
    வாய்மூ ரடிகள் வருவாரே.
10
திங்களோ டருவரைப் பொழிற்சோலைத்
    தேனலங் கானலந் திருவாய்மூர்
அங்கமோ டருமறை யொலிபாடல்
    அழல்நிற வண்ணர்தம் மடிபரவி
நங்கள்தம் வினைகெட மொழியவல்ல
    ஞானசம் பந்தன் தமிழ்மாலை
தங்கிய மனத்தினால் தொழுதெழுவார்
    தமர்நெறி யுலகுக்கோர் தவநெறியே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com